விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை
    விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்
வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்
    வன்றொண்டன் புறகவனை வலியே வாண்ட
துளங்குசடை முடியோனும் புறகென் றன்பாற்
    சொல்லுதலு மவர்தொண்டத் தொகைமுன் பாட
வுளங்குளிர வுளதென்றா ரதனா லண்ண
    லுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே.

மலைநாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாளர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மனசில் இருத்தி உட்பற்றுப் புறப்பற்றுக்களை அறுத்தவரும், அடியார் பத்தியிலே உயர்வொப்பில்லாதவருமாகிய விறன்மிண்டநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், சிவஸ்தலங்களுக்குப் போனபொழுதெல்லாம், முன் அடியார் திருக்கூட்டங்களுக்கு எதிரே போய், அவர்களை வணங்கிக்கொண்டே, பின் சிவபெருமானை வணங்குகின்றவர். அவர் தாம் வசிக்கின்ற மலைநாட்டை நீங்கி, பல தலங்களினும் சஞ்சரித்து, சிவனடியார்கள் ஒழுகும் ஒழுக்கத்தை அனுசரித்து, திருவாரூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் தேவாசிரயமண்டபத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவனடியார்களை அடைந்து வணங்காமல் ஒரு பிரகாரம் ஒதுங்கிச்சென்றதை அவ்விறன் மிண்டநாயனார் கண்டு, “அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு” என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அவ்விறன்மிண்டநாயனாரிடத்துள்ள சங்கம பத்தி வலிமையைக் கண்டு, அவ்வடியார்கள் மேலே திருத்தொண்டத்தொகை என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அதைக்கேட்ட விறன்மிண்ட நாயனார் மிகமகிழ்ந்து, “இவ்வன்றொண்டருடைய மனம் அடியாரிடத்திலே பதிந்திருக்கின்றது” என்று அருளிச் செய்தார். இந்தச் சங்கமபத்தி வலிமையைக் கண்ட பரமசிவனார் அவ்விறன்மிண்டநாயனாரைத் தம்மைச் சேவிக்கின்ற கணங்களுக்குத் தலைவராக்கியருளினார்.

திருச்சிற்றம்பலம்63.jpg

ஞாயிலார் மதிற்றொண்டை நாட்டு மேன்மை
    நண்ணுமயிலாபுரியின் வேளாண் டொன்மை
வாயிலார் மலைவில்லா னடியே போற்றி
    மறவாமை தலைநின்ற மனமே செம்பொற்
கோயிலா வுயர்ஞானம் விளக்கா நீராக்
    குலவியவா னந்தமன்பே யமுதாக் கொண்டு
தாயிலா னிருசரண நிகழ வேத்துந்
    தன்மையா ரருள்சேர்ந்த நன்மை யாரே.

தொண்டை நாட்டிலே, திருமயிலாப்பூரிலே, வேளாளர் குலத்திலே, வாயிலார்நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனை ஒருபொழுதும் மறவாத மனமாகிய ஆலயத்துள் இருத்தி, ஞானமாகிய திருவிளக்கை ஏற்றி, ஆனந்தமாகிய திருமஞ்சனமாட்டி, அன்பாகிய திருவமுதை நிவேதித்தலாகிய ஞானபூசையை நெடுங்காலஞ்செய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

62.jpg

சேதிபர்நற் கோவலூர் மலாட மன்னர்
    திருவேட மெய்ப்பொருளாத் தெளிந்த சிந்தை
நீதியனா ரூடன்பொருது தோற்ற மாற்றா
    னெடுஞ்சினமுங் கொடும்பகையு நிகழா வண்ண
மாதவர்போ லொருமுறைகொண்ட டணுகி வாளால்
    வன்னமபுரிந் திடமருண்டு வந்த தத்தன்
காதலுற நமர்தத்தா வென்று நோக்கிக்
    கடிதகல்வித் திறைவனடி கைகொண் டாரே.

சேதிநாட்டிலே திருக்கோவலூரிலே, மலையமானாட்டாருக்கு அரசரும், வேதாகமங்களின் உண்மையை அறிந்த வரும், சிவனடியார்களுடைய திருவேடத்தையே மெய்ப்பொருளெனச் சிந்தைசெய்பவருமாகிய மெய்ப்பொருணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய இராச்சியத்தைத் தருமநெறி தவறாமல் நடத்தியும், தம்மை எதிர்த்த பகைவர்களை ஜயங்கொண்டு, சிவாலயங்களெங்கும் நித்திய நைமித்திகங்களைச் சிறப்பாக நடத்தியும், சிவபத்தர்கள் வந்தபொழுது மனமகிழ்ச்சியோடும் வேண்டிய திரவியங்களைப் பூர்த்தியாகக் கொடுத்தும் வந்தார்.

இப்படி நடக்கும் காலத்திலே, முத்திநாதன் என்கின்ற ஓரரசனானவன் அவரை வெல்லுதற்கு விரும்பி, யுத்தசந்நத்தனாகி, அவரோடு பொருது, யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சேனைகளைப் பலமுறை இழந்து, தோற்று அவமானப் பட்டுப்போனான், பின்பு அவன்யுத்தத்தினாலே அவரை ஜயிக்கமாட்டாதவனாகி, அவரிடத்திலே இருக்கின்ற அடியார் பக்தியை அறிந்து, விபூதி தரிக்கின்ற அவ்வடியார்வேடங் கொண்டு அவரைக் கபடத்தினால் வெல்ல நினைந்து, சரீர முழுவதிலும் விபூதி தரித்து, சடைகளைச் சேர்த்துக் கட்டி புத்தகக்கவளிபோலத் தோன்றுகின்ற ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கின்ற ஓர் கவளியை எடுத்துக்கொண்டு, திருக்கோவலூரிற் சென்று. மெய்ப்பொருணாயனாருடைய திருமாளிகைவாயிலை அடைந்தான். அப்பொழுது வாயிற்காவலாளர் அவனை அஞ்சலிசெய்து, “சுவாமீ! உள்ளே எழுந்தருளும்” என்று சொல்ல; அம்முத்திநாதன் உள்ளே போய், மற்றவாயில்களையும் அப்படியே கடந்து சென்று இறுதி வாயிலை அடைந்தபொழுது, அவ்வாயிற் காவலாளனாகிய தத்தனென்பவன் “இப்பொழுது இராசா நித்திரை செய்கின்றார். நீர் சமயமறிந்து, போகவேண்டும்” என்றான். அதைக்கேட்ட முத்திநாதன் “நான் அவருக்குச் சாஸ்திரோபதேசஞ் செய்யப்போன்கின்றபடியால், நீ என்னைத் தடுக்கலாகாது” என்று சொல்லி, உள்ளே புகுந்து, மெய்ப்பொருணாயனார் கட்டிலிலே நித்திரைசெய்ய அவர்மனைவியார் பக்கத்திலிருக்கக் கண்டும், சமீபத்திலே சென்றான்.

அப்பொழுது, மனைவியார் சீக்கிரம் எழுந்து, மெய்ப்பொருணாயனாரை எழுப்ப; அவர் விழித்தெழுந்து, அவனை எதிர்கொண்டு வணங்கி நின்று; “சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளுதற்குக் காரணம் யாது” என்று வினாவினார். அதற்கு முத்திநாதன் “உங்கள் கடவுளாகிய பரமசிவன் ஆதிகாலத்திலே அருளிச்செய்த சைவாகமங்களுள் எவ்விடத்துங் காணப்படாத ஓராகமத்தை உமக்கு போதிக்கும்படி கொண்டு வந்தேன்” என்றான், மெய்பொருணாயனார் அதைக் கேட்டு, “இதைப்பார்க்கிலும் உயர்ந்தபேறு அடியேனுக்கு உண்டோ? அந்தச் சைவாகமகத்தை வாசித்து அடியேனுக்கு அதன்பொருளை அருளிச்செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்க முத்திநாதன் “பட்டத்தரசி இல்லாமல் நீரும் நானும் வேறிடத்திருக்கவேண்டும்” என்றான். உடனே மெய்ப்பொருணாயனார் தம்முடைய மனைவியாரை அந்தப்புரத்துக்குப் போம்படி செய்து, பொய்வேடங் கொண்ட முத்திநாதனை ஆசனத்தின் மேல் இருத்தி, தாம் கீழே இருந்துகொண்டு, “இனி அருளிச் செய்யும்” என்றார். முத்திநாதன் தன்கையில் இருந்த வஞ்சகக் கவளிகையை மடியின்மேல் வைத்து, புத்தகம் அவழிப்பவன் போல அவிழ்த்து, மெய்ப்பொருணாயனார் வணங்கும்போது, அக்கவளிகையில் மறைத்து வைத்த உடைவாளை எடுத்து, அவரைக்குத்த; அவர் சிவவேடமே மெய்ப்பொருலென்று அவனை வணங்கினார். அம்முத்திநாதன் உள்ளே புகுந்த பொழுதே “இராசாவுக்கு என்ன அபாயம் சம்பவிக்குமோ” என்று மனசை அங்கேயே செலுத்திக்கொண்டிருந்த தத்தனென்பவன் நொடியளவிலே உள்ளே புகுந்து, தன்கை வாளினால் அப்பகைவனை வெட்டப்போனான். அதற்குமுன் உடைவாளினாலே குத்தப்பட்டு இரத்தஞ்சொரிய விழப்போகின்ற மெய்ப்பொருணாயனார், விழும்பொழுது தத்தனே, இவர் சிவனடியாராதலால் இவருக்கு ஓரிடையூறும் செய்யாதே” என்று கையினாலே தடுத்து விழுந்தார். அப்பொழுது தத்தன் மெய்பொருணாயனாரைத் தலையினால் வணங்கி, அவரைத் தாங்கி, “அடியேன் செய்யவேண்டிய குற்றேவல் யாது” என்று கேட்க: மெய்ப்பொருணாயனார் “வழியிலே இவருக்கு யாவரொருவரும் இடையூறு செய்யாதபடி இவரை அழைத்துக் கொண்டு போய் விடு” என்று சொன்னார். அப்படியே தத்தன் முத்திநாதனை அழைத்துக் கொண்டு போம்பொழுது அம்முத்திநாதன் இராசாவைக் குத்தின சங்கதியை அறிந்தவர்களெல்லாரும் அவனைக் கொல்லும்படி வந்து சூழச்சூழ, அவர்களெல்லாரையும், ‘இந்தச் சிவபத்தருக்கு ஒருவரும் இடையூறுசெய்யாதபடி இவரை அழைத்துக்கொண்டுபோய் விடும்பொருட்டு இராசாவே எனக்கு ஆஞ்ஞாபித்தார்” என்று சொல்லி, தடுத்தான். அவர்களெல்லாரும் அதைக் கேட்டவுடனே பயந்து நீங்கிவிட: தத்தன் அவனை அழைத்துக்கொண்டு நகரத்தைக் கடந்து சென்று, அவனுக்குரிய நாட்டுவழியிலே அவனை விட்டு, நகரத்துக்குத் திரும்பி, சிவவேடங்கொண்ட முத்திநாதனை யாதொரு இடையூறும் வராமல் அழைத்துக் கொண்டு போய்விட்ட சமாசாரத்தைக் கேட்பதற்கு விரும்பி முன்னேயே நீங்கிவிடக்கூடிய உயிரைத்தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருணாயனாருக்குமுன் சென்று, வணங்கி நின்று, “சிவபத்தரை இடையூறு ஒன்றும் வராதபடி கொண்டுபோய்விட்டேன்” என்று சொன்னான். அதைக் கேட்ட மெய்பொருணாயனார் ‘இன்றைக்குநீ எனக்குச் செய்த உபகாரத்தை வேறார்செய்ய வல்லார்” என்று சொல்லி, பின்பு தமக்குப் பின் அரசாளுதற்குறிய குமாரர்களையும் மந்திரிமுதலானவர்களையும் நோக்கி, சைவாகமவிதிப்படி விபூதிமேல் வைத்த அன்பைப் பாதுகாக்கும்படி போதித்து, கனகசபையிலே ஆனந்ததாண்டவம் செய்தருளுகின்ற சபாநாதரைத் தியானம்பண்ணினார். அப்பொழுது சபாநாதர் மெய்ப்பொருணாயனாருக்குத் தோன்றி, அவரைத் தம்முடைய திருவடியிலே சேர்த்தருளினார்.

திருச்சிற்றம்பலம்61.jpg

வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம்
    வணிகர்திரு வாலவாய் மன்னர் சாத்தத்
தழங்குதிர முழங்கைதரத் தேய்த்த வூறுந்
    தவிர்ந்தமணர் வஞ்சனையுந் தவிர மன்ன
னிழந்தவுயி ரினனாக ஞால நல்க
    வெழில்வேணி முடியாக விலங்கு வேட
முழங்குபுக ழணியாக விரைநீ றாக
    மும்மையுல காண்டருளின் முன்னி னாரே.

பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, வைசியர் குலத்திலே சிவபத்தியே ஒருவடிவெடுத்தாற்போலும் மூர்த்திநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்த ஸ்தலத்திலே வீற்றிருக்கின்ற சோமசுந்தரக்கடவுளுக்குத் தரிக்கும் பொருட்டுத் தினந்தோறும் சந்தனக்காப்புக் கொடுத்து வருங்காலத்திலே; கருணாடதேசத்தரசன் சதுரங்க சேனைகளோடும் அம்மதுரைக்கு வந்து, பாண்டியனோடு யுத்தஞ் செய்து அவனைவென்று, அந்நகருக்கு அரசனாயினான். அவன் புறச்சமயிகளாகிய சமணர்களுடைய போதனார்த்தியினாலே ஆருகதமதத்திற் பிரவேசித்து, சிவனடியார்களுக்கு இடுக்கண் செய்வானாயினான் ஆயினும், மூர்த்திநாயனார் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாது செய்து வந்தார்.

அது கண்டு, அரசன் அவரை ஆருகதமதத்திலே பிரவேசிப்பித்திற்கு உத்தேசித்து, அவருக்குப் பல கொடுஞ்செய்கைகளைச் செய்தான். செய்தும், அவர் தம்முடைய திருப்பணியினின்றும் சிறிதும் வழுவாதவராயினார். அது பற்றி அவ்வரசன் அவர் சந்தனக்கட்டை வாங்குமிடங்களிளெல்லாம் அவருக்குக் கொடுக்க வொட்டாமற். றடுத்தான். அதனால் அவர் மனநொந்து, “இப்பாண்டி நாடு, துர்ச்சமயமாகிய ஆருகதசமயத்திலே பிரவேசித்துச் சிவபுண்ணியத்துக்கு இடையூறுசெய்கின்ற அதிபாதனாகிய இவ்வரசன் இறக்க, சற்சமயமாகிய சைவசமயத்தை வளர்க்கின்ற அரசரைச் சாருங்காலம் எக்காலம்” என்று நினைந்து துக்கித்து, பகற்காலமுழுதும் சந்தனக்கட்டை தேடித் திரிந்து, எங்கும் பெறாமையால் ஆலயத்துக்குவந்து, “சுவாமிக்குத்தரிப்பதற்குத் தேய்த்துக் கொடுக்கும்பொருட்டுச் சந்தனக்கட்டைக்கு இன்றைக்கு முட்டு வந்தாலும், அக்கட்டையைப் போலத் தேய்க்கத்தக்க கைக்கு ஒரு முட்டும் இல்லை” என்று ஒரு சந்தனக் கல்லிலே தம்முடைய முழங்கையை வைத்து, தோலும் நரம்பும் எலும்பு தேய்ந்து குறையும்படி தேய்த்தார். தேய்த்தலும், உதிரம் ஒழுகி நாற்புறத்திலும் பெருகி எலும்பினுள்ளே இருக்கும் துவாரந்திறந்து மூளை வெளியிலே வந்தது. அப்பொழுது, “அன்பனே! நீ பத்தியினது உறுதிப்பாட்டினால் இப்படிப்பட்ட செய்கையைச் செய்யாதே. உனக்கு இடுக்கண்செய்த, கொடுங்கோலரசன் பெற்ற இந்நாடு முழுவதையும் நீயே கைக்கொண்டு இதற்கு முன் இவ்விடத்திலே அவனாலுண்டாகிய கொடுமைகள் யாவற்றையும் நீக்கி, பரிபாலனஞ்செய்து, உன்னுடைய பணியை நடப்பித்து, பின்பு நம்முடைய சிவலோகத்தை அடைதி” என்று ஒரு அசரீரிவாக்கு எழுந்தது. மூர்த்திநாயனார் அதைக் கேட்டு, அஞ்சி, கையைத் தேய்த்தலை ஒழிந்து எழுந்தார். உடனே அவர் கையானது தேய்த்தனாலாகிய ஊறு நீங்கி முன்போலாயிற்று.

அவ்விரவிலே அந்தக்கருணாடராஜன் இறந்து, சிவனடியார்களுக்கு வருத்தஞ்செய்த அதிபாதகத்தினாலே கொடுமையாகிய நரகத்திலே விழுந்தான். மற்ற நாள் பிராதக் காலத்திலே மந்திரிமார்கள் கூடி, தகனசமஸ்காரஞ் செய்து, பின்னர்த் தங்கள் அரசனுக்குப் புத்திரர் இல்லாமையால் வேறொருவரை அரசராக நியோகித்தற்கு உபாயத்தை ஆலோசித்து, “யானையைக் கண்கட்டிவிடுவோம், அந்த யானை எவரை எடுத்துக்கொண்டுவருமோ அவரே இந்நாட்டுக்கு அரசராவார்” என்று நிச்சயித்துக்கொண்டு, யானையை விதிப்படி அருச்சித்து, “நீ இந்த நாட்டை ஆளுதற்குவல்ல ஒருவரையெடுத்துக் கொண்டு வா” என்று சொல்லி, அதை வஸ்திரங்கொண்டு கண்ணைக் கட்டி விட்டார்கள். அந்த யானை அந்தப்பட்டணத்து வீதிகளிலே திரிந்து சென்று, சொக்கநாத சுவாமியுடைய ஆலயத்தின் கோபுரத்துக்கு முன்னே போயிற்று. மூர்த்தி நாயனார் இரவிலே தமக்குச் செவிப்புலப்பட்ட அசரீரிவாக்கினால் மனத்துயரம் நீங்கி “நமது கடவுளாகிய பரமசிவனுக்குத் திருவுளமாகில் அடியேன் இந்த நாட்டை ஆளுதற்கு உடன்படுவேன்” என்று நினைத்துக்கொண்டு, திருக்கோயிற்புறத்திலே நின்றார். யானையானது அவர் திருமுன்னே சென்று தாழ்ந்து, அவரை எடுத்து, முதுகின்மேல் வைத்துக்கொண்டது. அது கண்ட மந்திரிமார்கள் அவரை நமஸ்கரித்து, யானையின் முதுகினின்றும் இறக்கி, முடிசூட்டு மண்டபத்திலே கொண்டு போய், ஒரு சிங்காசனத்தின்மேல் இருத்தி, மூடி சூட்டுக்கு வேண்டும் மங்கலகிருத்தியங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். மூர்த்திநாயனார் அவர்களை நோக்கி, “ஆருகதமதம் நீங்கிச் சைவசமயம் விருத்தியாபின் நான் இந்நாட்டை ஆளுதற்கு உடன்படுவேன்” என்றார். அதைக்கேட்ட மந்திரிமார்களும் சாஸ்திரபரிசயமுள்ள பிறரும் அவரை வணங்கி நின்று, “சுவாமீ! தேவரீருடைய ஆஞ்ஞையின்படியேயன்றி அதற்கு மாறாக யாவர் செய்வார்கள்” என்று சொன்னார்கள். பின்பு மூர்த்திநாயனார் “நான் அரசாள்வேனாகில், எனக்கு விபூதியே அபிஷேகத்திரவியமும், உருத்திராட்சமே ஆபரணமும், சடாமுடியே கிரீடமும் ஆகுக” என்றார். அவர்கள் “தேவரீர் அருளிச்செய்தபடியே ஆகுக” என்று சொல்லி, மகுடாபிஷேகத்துக்கு வேண்டும் செய்கைகளைச் செய்து நிறைவேற்றினார்கள்.

மூர்த்திநாயனார் சடைமுடி தரித்து ஆலயத்திற்சென்று சோமசுந்தரக்கடவுளை வணங்கிக்கொண்டு யானையின்மேல் ஏறி. இராசமாளிகையைச் சேர்ந்தார். அங்கே அத்தாணி மண்டபத்திலே இரத்தின சிங்காசனத்தின் மேலே தவளச் சந்திரநிழலிலே வீற்றிருந்துகொண்டு, பொய்ச்சமயமாகிய ஆருகதம் நீங்கவும், மெய்ச்சமயமாகிய சைவசமயமே எங்கும் விளங்கவும், பெண்ணாசை சிறிதுமின்றி, நெடுங்காலம் விபூதி உருத்திராக்ஷம் சடைமுடி என்கின்ற மூன்றினாலும் அரசாண்டு, பின் சிவபதப் பிராப்தியானார்.

திருச்சிற்றம்பலம்moorthi nayanar 60.jpg

தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்
    தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று
கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்
    கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்
விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள
    வெகுண்டிடலான் "மூர்க்கர்" என விளம்பும் நாமம்
எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்
    ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

தொண்டைநாட்டிலே, திருவேற்காட்டிலே, வேளாளர் குலத்திலே தலைமைபெற்ற ஒருவர், தினந்தோறும் சிவனடியார்களை, சிவனென வணங்கித் துதித்துத் திருவமுது செய்வித்துப் பின்பு தாம் உண்பவரும், அவர்கள் விரும்பும் பொருள்களையும் கொடுப்பவருமாய் இருந்தார். இப்படியிருக்கு நாளிலே, அடியார்கள் அநேகர் எழுந்தருளி வருகின்றமையால் அவர் தம்மிடத்துள்ள திரவியங்களெல்லாஞ் செலவாகிவிட; அடிமை நிலம் முதலியனவற்றை விற்றும், மாகேசுரபூசையை வழுவாது மனமகிழ்ச்சியோடு செய்து வந்தார். அதன்பின், மாகேசுரபூசைச் செலவுக்குப் பொருள் இன்மையாற் கலவைகொண்டு, தம் முன்னே பயின்ற சூதினாலே பொருள் சம்பாதிக்க நினைந்து, அவ்வூரிலே சூதாடுவோர் இல்லாமை பற்றி அவ்வூரை அகன்று, சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமி தரிசனஞ் செய்து, சூதாடலால், வரும் பொருளினாலே தம்முடைய நியதியை முடித்து, சிலநாளிலே கும்பகோணத்தை அடைந்தார். அங்கே சூதாடிப் பொருள்தேடி மாகேசுரபூசை செய்தார். சூதிலே முதலாட்டத்திலே தாந்தோற்று, பின்னாட்டங்களிலே பல முறையும் வென்று, அதனாலே பொருள் ஆக்கி சூதிலே மறுத்தவர்களை உடைவாளை உருவிக்குத்தி, நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினாலே வரும் பொருளைத் திருவமுதாக்குவோர்கள் கொள்ள; தாந்தீண்டார் அடியார்கள் திருவமுது செய்தபின் தாங்கடைப்பந்தியிலே அமுது செய்வாராயினார். இவர் இப்படிச் சிலகாலம் மாகேசுரபூசை செய்து கொண்டிருந்து, அந்த மகத்தாகிய சிவபுண்ணியத்தினாலே சிவபதம் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்moorkka nayanar 59.jpg

பொன்னிவளந் தருநாட்டுப் புகழு நீடூர்ப்
    பொருவிறிரு மலிவேளாண் டொன்மை மிக்கார்
முன்னியவர் முனையடுவா ரிகலார் போரின்
    முரணழிவார் தமக்காக மொழிந்த கூலி
மன்னுநிதி கொண்டுசயங் கொடுத்து வந்த
    வளர்பொருளா லிறைவனடி வழுவா வன்பர்க்
கன்னமவர் நசையின்மிக மிசைய நல்கு
    மன்பர்துன்ப மவையாவு மகன்று ளாரே.

சோழ நாட்டிலே, திரநீடுரிலே, வேளாளர் குலத்திலே சிவனடியார்களிடத்தே மிகுந்த பக்தியுடைய ஒரு பெரியவர் இருந்தார். அவர் சத்துருக்களுடைய போர்முனையிலே தோற்றவர்கள் தம்மிடத்தில் வந்து கூலி பேசினால், அவர்களுக்காகப்போய்ப் போர்செய்து வென்று, பொருள் சம்பாதித்து, சிவனடியார்களுக்குச் சொன்ன சொன்னபடியே நிரம்பக்கொடுத்து அவர்களைத் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு முனையடுவார் நாயனாரென்னுந் திருநாமம் உண்டாயிற்று. அவர் நெடுங்காலம் இவ்வருமையாகிய திருத்தொண்டைச் செய்துகொண்டிருந்து சிவபதம் பெற்றார்.

திருச்சிற்றம்பலம்.munaiyaduvar 58.jpg

மன்னுதிருப் புகலூர்வாழ் முருகனாரா
    மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார்
சென்னியினுக் கழகமரு மலர்கள் கொய்து
    திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக்
கன்னிமதிற் கழுமலநா டுடைய நாத
    காதன்மிகு மணங்காணுங் களிப்பினாலே
யின்னல்கெட வுடன்சேவித் தருளான் மீளா
    திலங்கு பெரு மணத்தரனை யெய்தி னாரே.

சோழமண்டலத்தில், திருப்புகலூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவராகிய முருகநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தினந்தோறும் சூரியோதயத்துக்குமுன் எழுந்து ஸ்நானம்பண்ணிச் சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு போய், கோட்டுப்பூ கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்கின்ற நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிலே இட்டுக்கொண்டு வந்து, தனியிடத்திலிருந்து, பலவகைப்பட்ட திருமாலைகள் செய்து, அந்த ஸ்தலத்திலுள்ள வர்த்தமானீச்சரம் என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தும், திவ்விய மந்திரமாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் செபித்தும் வருவார்.

இப்படிச் செய்துவருங்காலத்திலே, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குச் சிநேகராகிய பெருமையையும் பெற்றார். பெற்ற அம்முருகநாயனார் அந்தத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமணத்தில் தம்முடைய சிவபூசாபலத்தினாலே போய், பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

muruga nayanar 57.jpg

manakanjarayar 56.jpg
கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்சீர்க்
    காதன்மகள் வதுவைமணங் காண நாதன்
வஞ்சமலி மாவிரதத் தலைவ னாகி
    வந்துபுகுந் தவளளக மகிழ்ந்து நோக்கிப்
பஞ்சவடிக் காமென்ன வரிந்து நீட்டும்
    பத்தரெதீர் மறைந்திறைவன் பணித்த வாக்கா
லெஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை
    யேயர்பிராற் குதவியரு ளெய்தி னாரே.

கஞ்சாறூரிலே, வேளாளர்குலத்திலே, அரசர்களிடத்திற் பரம்பரையாகச் சேனாதிபதிநியோகத்தில் இருக்கின்ற குடியிலே சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்த மானக்கஞ்சாறநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிலகாலம் பிள்ளைப் பேறின்மையால் அதிதுக்கங்கொண்டு, பிள்ளைப் பேற்றின் பொருட்டுப் பரமசிவனை உபாசனைபண்ணி, அவருடைய திருவருளினால் ஒரு பெண்குழந்தையைப் பெற்றார். அந்தப் பெண் வளர்ந்து மணப்பரும் அடைய; ஏயர்கோன் கலிக்காம நாயனார் சில முதியோர்களை மானக்கஞ்சாறநாயனாரிடத்தில் அனுப்பி, அந்தப்பெண்ணைத் தமக்கு விவாகஞ் செய்து தரும்படி பேசுவித்து, அவர் அதற்கு உடன்பட்டமையை அறிந்து, சோதிடர்களாலே நிச்சயிக்கப்பட்ட சுபதினத்திலே மணக்கோலங்கொண்டு, சுற்றத்தார்களோடும் கஞ்சாறூருக்குச் செல்லும்படி பிரஸ்தானமானார்.

அவர் கஞ்சாறூருக்கு வருதற்குமுன்னே, கருணாநிதியாகிய பரமசிவன் ஒரு மகாவிரதி வடிவங்கொண்டு, மானக்கஞ்சாற நாயனார் வீட்டுக்குச் சென்றார். அந்நாயனார் அவரைக்கண்டு எதிர்கொண்டு, உபசாரவார்த்தைகளைச் சொல்லி வணங்கினார். மகாவிரதியார் அந்நாயனாரை நோக்கி, “இங்கே என்னமங்கல கிருத்தியம் நடக்கப்போகின்றது” என்றுவினாவ; நாயனார் “அடியேனுடைய புத்திரியின் விவாகம் நடக்கப்போகின்றது” என்றார். மகாவிரதியார் “உமக்குச் சோபனம் உண்டாகுக” என்று ஆசிர்வதித்தார் நாயனார் உள்ளே போய், மணக்கோலங் கொண்டிருந்த தமது புத்திரியை அழைத்துவந்து மகாவிரதியாரை வணங்கும்படி செய்தார். மகாவிரதியார் தம்மைவணங்கி எழுந்தபெண்ணினுடைய கூந்தலைப் பார்த்து, மானக்கஞ்சாற நாயனாரை நோக்கி, “இந்தப் பெண்ணினுடைய தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்கு (பஞ்சவடியாவது மயிரினாலெ அகலமாகச் செய்யப்பட்டு மார்பிலே பூணூலாகத் தரிக்கப்படும் வடமாம். பஞ்சம் -விரிவு வடி-வடம்) உதவும்” என்றார். உடனே நாயனார் தம்முடைய உடைவாளை உருவி, “இவர் இது கேட்டதற்குச் சிறியேன் என்னபுண்ணியஞ் செய்தேனோ” என்று, அந்தப் பெண்ணினுடைய கூந்தலை அடியிலே அரிந்து, அம்மகாவிரதியார் கையிலே நீட்ட; கடவுள் தாங்கொண்டு வந்த மகாவிரதிவடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றினார். அதுகண்டு, மானக்கஞ்சாறநாயனார் பரவசமாகி, அடியற்ற மரம்போல விழுந்து நமஸ்கரித்து எழுந்து, அஞ்சவியஸ்தராகி நின்றார். சிவபெருமான் அம்மானக்கஞ்சாற நாயனாருக்குத் தம்முடைய சந்நிதானத்திலே தம்முடைய பெருங்கருணைத் திறத்தைப் புகழ்ந்து கொண்டிருக்கும் பெரும் பேற்றைக் கொடுத்து அந்தர்த்தான மாயினார்.

கலிக்காமநாயனார் கஞ்சாறூரிலே வந்து சேர்ந்து அங்கே நிகழ்ந்த சமாசாரத்தைக் கேள்வியுற்று மனமகிழ்ந்து, திருவருளைத்துதித்து, “முண்டிதஸ்திரியை விவாகம்பண்ணுதல் சாஸ்திர விரோதமன்றோ” என்று மனந்தளர, அதற்குச் சிவபெருமான் “கலிக்காமா! நீ மனந்தளரவேண்டாம்; இந்தப் பெண்ணுக்குக் கூந்தலை மீளக் கொடுத்தருள்கின்றோம்” என்று அருளிச்செய்த திருவாக்கைக் கேட்டு, மனத்தளர்ச்சி நீங்கி, முன்போலக் கூந்தலைப் பெற்ற அப்பெண்ணை விவாகஞ்செய்து கொண்டு, தம்முடைய ஊருக்குப் போய்விட்டார்.

திருச்சிற்றம்பலம்

mangayirkarasi55.jpg
மங்கையர்க்குத் தனியரசி வளவர்குலக் கொழுந்து
    மன்னவர்சூழ் தென்னவர்க்கு மாதேவி யார்மண்
சங்கைகெட வமண்சமயஞ் சாட வல்ல
    சைவசிகா மணிஞானத் தமிழிற் கோத்த
பொங்குதிரு வருளுடைய போத வல்லி
    பொருவினெடு மாறனார் புயமேல் வாழுஞ்
செங்கலச முலையாட னருளா லின்பஞ்
    சேர்ந்தவரைப் புகழ்ந்தடியேன் வாழ்ந்த வாறே.

மதுரையில் இருந்த நெடுமாறநாயனாருக்கு மனைவியார் சோழராஜாவுடைய புத்திரியாராகிய மங்கையர்க்கரசியார். அவர் சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டவர். அந்தப் பரமாசாரியருடைய திருவருளினாலே நெடுங்காலம் தம்முடைய நாயகருக்குச் சைவவழித் துணையாகி, பாண்டி நாடெங்கும் சைவத்திருநெறியைப் பரிபாலனஞ் செய்து கொண்டிருந்து, அந்நாயகரோடு சிவபதத்தை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்.

 

கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக்
    கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீ
ரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு
    மாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய்
மண்டொழுமெண் டருசித்தி வாய்த்து ளார்தாம்
    வன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு
னெண்டிகழு மறைமூல நெறியூ டேகி
    யிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.

மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதீர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.

இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம்பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; “சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்” என்று நினைந்து, “இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்” என்று துணிந்து, யோகமுயற்சியினாலே பிரமரந்திரந்திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்perumilalai nayanar 54.jpg